வடக்கு மாகாணசபையுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி பேச்சு
ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறிலங்காவுக்கான பணியகத்தின் அரசியல், வர்த்தக மற்றும் தொடர்பாடல் பிரிவின் தலைவர் போல் கொட்பிரே, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
மக்களின் தேவைகளைப் பிரதிபலிக்கும் வகையில் சிறிலங்காவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பணிகள் இடம்பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்வது தொடர்பாக இந்தச் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டதாக போல் கொட்பிரே தெரிவித்தார்.
வடமாகாண முதலமைச்சர் மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளின் கருத்துக்களை புரிந்து கொள்வது ஐரோப்பிய ஒன்றியத்துக்கு மிகவும் முக்கியமான விடயம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, வடக்கில் உள்ள மக்களின் கரிசனைகளை புரிந்து கொள்ளுமாறு ஐரோப்பிய ஒன்றியத்திடம் தாம் கடந்த காலத்தில் வலியுறுத்தியிருந்ததாகவும், அதன் விளைவாக, எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றுவது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி தம்முடன் பேச்சு நடத்தினார் என்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.