நல்லிணக்கச் செயற்திட்டங்களுக்கு வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு தடை
ஐ.நாவுடன் தொடர்புடைய அமைப்புகளின் உதவியுடன் சந்திரிகா குமாரதுங்க மற்றும் மனோ கணேசன் உள்ளிட்டோரால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க விழிப்புணர்வுத் திட்டங்களைக் குழப்பும் உத்தரவு ஒன்று சிறிலங்கா பிரதமரால் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
புதிய அரசியலமைப்பு மற்றும் நல்லிணக்கச் செயற்திட்டங்கள் தொடர்பாக அனைத்துலக அமைப்புகளிடம் இருந்து எந்தவொரு நிதியையும் பெறக்கூடாது என்று சிறிலங்கா பிரதமரின் செயலர் சமன் எக்கநாயக்க, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த திட்டங்கள் வெளிவிவகார அமைச்சின் ஊடாகவே செயற்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அதேவேளை அமைதியைக் கட்டியெழுப்பும் குழுக்களுக்கான சிறப்புக் கூட்டம் ஒன்றை வரும் வெள்ளிக்கிழமை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில், சிறிலங்கா பிரதமரின் செயலர் சமன் எக்கநாயக்க கூட்டியுள்ளார்.
சிறிலங்கா பிரதமரின் செயலர் விடுத்துள்ள உத்தரவினால், ஐ.நாவுடன் தொடர்புடைய அமைப்புகளின் உதவியுடன் சந்திரிகா குமாரதுங்க மற்றும் மனோ கணேசன் உள்ளிட்டோரின் தலைமையில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க விழிப்புணர்வுத் திட்டங்கள் பாதிக்கப்படும் என்றும் ஆங்கில ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.