புலிகளுக்கு எதிரான போரின் போது வேவு பார்த்தது இந்திய விமானம் – ஒப்புக்கொள்கிறது இந்தியா
விடுதலைப் புலிகளுடன் போர் நடந்து கொண்டிருந்த போது, சிறிலங்காவைச் சுற்றிய வான்பரப்பில் ரியூ 142 எம் என்ற இந்திய கடற்படையின் நீண்ட தூர கடல்சார் கண்காணிப்பு விமானம் விரிவான கண்காணிப்பில் ஈடுபட்டிருந்ததாக இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்பா தெரிவித்துள்ளார்.
அரக்கோணத்தில் உள்ள இந்திய கடற்படையின் ராஜாளி தளத்தில் இருந்தே இந்த விமானம் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தது.
ஐஎன்எஸ் ராஜாளி தளத்தின் வெள்ளி விழா மற்றும் இந்திய கடற்படையினால் 29 ஆண்டுகளாக கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்ட ரியூ 142 எம் விமானத்தை, சேவையில் இருந்து விலக்கும் நிகழ்வு நேற்று அரக்கோணத்தில் உள்ள ஐஎன்எஸ் ராஜாளி தளத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்பா,
”விடுதலைப் புலிகளுடன் போர் நடந்து கொண்டிருந்த போது, சிறிலங்காவைச் சுற்றிய வான்பரப்பில் இந்திய கடற்படையின் நீண்ட தூர கடல்சார் கண்காணிப்பு விமானமான ரியூ 142 எம் விரிவான கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தது.
மாலைதீவில் ஒப்பரேசன் கக்டஸ் நடவடிக்கையிலும் இந்த விமானம் முக்கிய பங்காற்றியது.
2013ஆம் ஆண்டு தொடக்கம் இந்தியப் பெருங்கடலில் சீனா தனது நீர்மூழ்கிகளை நிறுத்தியுள்ளது. இந்தியப் பெருங்கடலில் நடமாடும் சீன நீர்மூழ்கிகளின் பாதைகளை இந்தியக் கடற்படை கண்டு பிடித்து கண்காணித்து வருகிறது.” என்று தெரிவித்துள்ளார்.