மேலும்

அம்பாந்தோட்டையை சீனாவுக்கு வழங்குவது இந்தியாவுக்கு பாரிய அச்சுறுத்தல் – ஜி.பார்த்தசாரதி

G Parthasarathyஅம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிடம் சிறிலங்கா கையளிக்கவுள்ளதானது, இந்தியாவுக்குப் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்று, புதுடெல்லியைத் தளமாக கொண்ட கொள்கை ஆய்வுக்கான நிலையத்தின் வருகை பேராசிரியரான ஜி.பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.

சென்னையில் கடந்த சனிக்கிழமை சென்னை அனைத்துலக நிலையத்தில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய, இந்தியாவின் முன்னாள் மூத்த இராஜதந்திரியான ஜி பார்த்தசாரதி அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்-

“பாதுகாப்பு மற்றும் பொருளாதார விவகாரங்களில் சீனாவுடனான தொடர்புகள் இந்தியாவுக்கு முக்கியமானது.

தனது இருப்பை வலுப்படுத்துவதற்காக சீனா பாரிய பொருளாதார முதலீடுகளின் கூலம் இந்தியாவை சுற்றிவளைத்துள்ளது.

சீனாவின் நிதியில் பாரிய உட்கட்டமைப்பு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் சிறிலங்கா கடன்பொறியில் விழுந்துள்ளது.

கடனுக்குப் பங்குகள் என்ற அடிப்படையில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிடம் கையளிக்கவுள்ளது சிறிலங்கா. இது இந்தியாவுக்குப் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

பாகிஸ்தானில், நேபாளத்தில், ஆபிரிக்காவிலும் கூட சீனா பாரிய உட்கட்டமைப்புத் திட்டங்களில் முதலீடு செய்துள்ளது.

50 பில்லியன் டொலர் சீன- பாகிஸ்தான் பொருளாதார தாழ்வாரத் திட்டத்தினால், சிறிலங்காவின் வழியில் பாகிஸ்தானும் செல்லக் கூடும்.

சீனாவின் பொருளாதாரம், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட ஐந்து மடங்கு பெரியது. அது பாதுகாப்புக்காக இந்தியாவை விட 6-8 எட்டு மடங்கு அதிகமாக செலவிடுகிறது.

சீனாவின் சவாலை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால், எந்தவொரு அயல்நாட்டுடனும் மோதிக்கொள்வது சரியானதல்ல.

அடுத்த இரண்டு பத்தாண்டுகளில் இந்தியா பொருளாதார அபிவிருத்தி மீது கவனம் செலுத்த வேண்டும். பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் ஆனால் தீவிர தேசியவாதத்தை தவிர்க்க வேண்டும். காட்சிப்படுத்தலுக்கு அப்பால் பலத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

சிறிலங்காவின் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு இந்தியா 15 பில்லியன் டொலர்களை உதவியாக வழங்கியுள்ளது.

தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளது. 500 உழவு இயந்திரங்களையும், 10 ஆயிரம் மிதிவண்டிகளையும், 90 ஆயிரம் விவசாய கருவிகளையும், 200 மீன்பிடிப் படகுகளையும், இந்தியா வழங்கியுள்ளது.

விமான நிலையங்களைப் புனரமைத்து, தொடருந்துப் பாதைகளை மீளமைத்துக் கொடுத்திருக்கிறது.

சிறிலங்காவில் இந்தியா எதைச் செய்துள்ளது என்று இந்திய ஊடகங்கள் யாழ்ப்பாணத்துக்குச் சென்று பார்க்கலாம்.” என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *