ஜெனிவாவில் இன்று சிறிலங்கா குறித்த விவாதம்
ஜெனிவாவில் நடந்து வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடரில் இன்று சிறிலங்கா குறித்த விவாதம் இடம்பெறவுள்ளது.
இன்றைய அமர்வில், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், சிறிலங்கா தொடர்பான தமது அறிக்கையை அதிகாரபூர்வமாக சமர்ப்பித்து உரையாற்றுவார்.
2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தில், ஐ.நா மனித உரிமைகள் பேரவை அளித்திருந்த ஆணைக்கு அமைய, தீர்மானத்தின் முன்னேற்றங்கள் தொடர்பாக இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது.
ஜெனிவா நேரப்படி 3 மணிக்கு ஆரம்பமாகும் பிற்பகல் அமர்விலேயே ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மற்றும் அதையடுத்த விவாதம் இடம்பெறவுள்ளது.
இதில் பேரவையின் உறுப்பு நாடுகள், கண்காணிப்பு நாடுகள், மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று உரையாற்ற அனுமதி அளிக்கப்படும்.
அதேவேளை, நாளை சிறிலங்கா தொடர்பான தீர்மானம் குறித்து விவாதம் நடத்தப்பட்டு, நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிலங்காவில் நல்லிணக்கம், மனித உரிமைகள், மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவித்தல் என்ற தலைப்பில் ஏற்கனவே தீர்மான வரைவு பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தில் திருத்தம் ஏதும் செய்யப்படும் என்று எதிர்பார்க்கவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனிடையே, பல்வேறு அமைப்புகளின் சார்பில் ஜெனிவாவில் தொடர் உப மாநாடுகள் நடத்தப்பட்டு சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலைமைகளை தெளிவுபடுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதில் தாயகத்தில் இருந்தும், தமிழ்நாட்டில் இருந்தும், புலம்பெயர் தேசங்களில் இருந்தும் வந்துள்ள பலரும் பங்கேற்று வருகின்றனர்.