சீன பாதுகாப்பு அமைச்சர் சிறிலங்காவுக்கு அவசர பயணம்
சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் சாங் வான்குவான் மூன்று நாட்கள் அவசர பயணமாக இன்று சிறிலங்காவுக்கு வரவுள்ளார். அமெரிக்கா மற்றும் மேற்குலத்தை நோக்கி சிறிலங்கா சாய்வதாக சீன கரிசனை கொண்டுள்ள சூழலில் அவரது இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது.
இந்தப் பயணம் அவசரஅவசரமாகத் திட்டமிடப்பட்டது என்றும், பிராந்தியத்தில் மேலும் சில நாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொள்ளவிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தப் பயணத்தின் போது, சிறிலங்காவின் அனைத்து உயர்மட்டத் தலைவர்களுடனும், சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் சாங் வான்குவான், பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
அத்துடன் சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரி கல்லூரிக்கும் அவர் சென்று நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.
சீன பாதுகாப்பு அமைச்சர் தலைமையிலான குழுவில் அரசவையி் பொதுச்செயலர் உள்ளிட்ட 20 பேர் இடம்பெறவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் சீன பாதுகாப்பு அமைச்சரின் இந்தப் பயணத்துக்கான நோக்கம் இன்னமும் வெளிப்படுத்தப்படவில்லை.
ஆழ்கடல் ரோந்துக் கப்பல் ஒன்றை வாங்குவதற்கு 17 மில்லியன் டொலரை சிறிலங்காவுக்கு வழங்கவுள்ளதாக கடந்த ஆண்டு சீனா அறிவித்திருந்தது. எனினும் இது தொடர்பான பேச்சுக்கள் இன்னமும் முடிவுக்கு வரவில்லை.
அதேவேளை, சீன பாதுகாப்பு அமைச்சர் இந்தப் பயணத்தின் போது, சிறிலங்கா படைகளுக்கு ஏனைய ஆயுதங்களை வழங்குவது தொடர்பான அறிவிப்புகளையும் வெளியிடக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.