தமிழ்நாட்டு பக்தர்கள் வராததால் களையிழந்த கச்சதீவு திருவிழா
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இன்று ஆரம்பமாகியது. இந்தியாவில் இருந்து பக்தர்களோ, குருமாரோ வருகை தராதததால், இந்த திருவிழா களையிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆண்டுதோறும் நடக்கும் கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழாவில் தமிழ்நாட்டில் இருந்தும், இலங்கையில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடுவது வழக்கம்.
இந்த ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. நாளை கூட்டுத் திருப்பலி மற்றும் திருவுருவ பவனியுடன் விழா நிறைவடையவுள்ளது.
கச்சதீவில் புதிய தேவாலயம் கட்டப்பட்ட பின்னர் நடைபெறும் இந்த ஆண்டுக்கான திருவிழாவில் சுமார் 9 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், இன்று மாலை வரையில் கச்சதீவில் சுமார் ஆயிரம் பேர் வரையிலேயே ஒன்று கூடியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்தில் இருந்து வருகை தந்தவர்கள் மாத்திரமே கச்சதீவு திருவிழாவில் பங்கேற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் இருந்து சுமார் 4ஆயிரம் பேர் வரையில் கச்சதீவு திருவிழாவில் பங்கேற்பது வழக்கம்.
கடந்த திங்கட்கிழமை இரவு கச்சதீவு அருகே தமிழ்நாட்டு மீனவர் ஒருவர் சிறிலங்கா கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கச்சதீவு திருவிழாவைப் புறக்கணிக்க தமிழ்நாட்டு மீனவர்கள் முடிவு செய்திருந்தனர்.
இதனால் தமிழ்நாட்டில் இருந்து இன்று கச்சதீவு திருவிழாவுக்கு எவரும் வருகை தரவில்லை. இதனால் கச்சதீவு திருவிழா இம்முறை களையிழந்து போயுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த குருமாருடன் இணைந்தே கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படுவது வழக்கமாகும். எனினும், இம்முறை அவர்களும் வருகை தராததால், இலங்கையைச் சேர்ந்த கத்தோலிக்க குருமாரே திருப்பலி ஒப்புக் கொடுக்கவுள்ளனர்.