ஆப்கானிஸ்தானுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டார் முன்னாள் விமானப்படைத் தளபதி
ஆப்கானிஸ்தானுக்கான சிறிலங்கா தூதுவராக, சிறிலங்காவின் முன்னாள் விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் ககன் புலத்சிங்கள பதவியேற்றுள்ளார்.
இவர் கடந்த மார்ச் 7ஆம் நாள், ஆப்கானிஸ்தான் அதிபர் முகமட் அஷ்ரப் கானியிடம், தமது நியமனப் பத்திரங்களைக் கையளித்தார்.
விமானப்படைத் தளபதி பதவியில் இருந்து அண்மையில் ஓய்வு பெற்றதையடுத்து, எயர் சீவ் மார்ஷல் ககன் புலத்சிங்களவுக்கு சிறிலங்கா அரசாங்கம் இந்த இராஜதந்திரப் பதவியை வழங்கியுள்ளது.
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் இராஜதந்திரப் பதவிகளுக்கு அதிகளவிலான படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அந்த நிலையை மாற்றப் போவதாக, தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வரும் போது கூறியிருந்தது.
எனினும், அந்த வாக்குறுதியை மீறும் வகையில் சிறிலங்காவின் ஓய்வுபெற்ற படை அதிகாரிகள் தொடர்ந்தும், வெளிநாட்டுத் தூதுவர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டு வருகின்றனர்.