சிறிலங்கா குறித்த நிலைப்பாட்டை ஜெனிவாவில் இன்று வெளிப்படுத்துமா அமெரிக்கா?
சிறிலங்கா தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடு இன்று ஜெனிவாவில் வெளிப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 2015 ஒக்ரோபரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை.
இந்த நிலையில், சிறிலங்காவுக்கு கால அவகாசத்தை வழங்கும் தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட வேண்டும் என்று பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.
எனினும், கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற அமெரிக்காவின் டொனால்ட் ட்ரம்ப் அரசாங்கம், சிறிலங்கா தொடர்பான எந்த நிலைப்பாட்டையும் இதுவரையில் வெளியிடவில்லை.
புதிய அரசு பதவியேற்ற பின்னர் அமெரிக்க உயர் அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்றக் குழுக்கள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்துள்ளன.
இந்த நிலையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கப் பிரதிநிதியாக, இராஜாங்கத் திணைக்களத்தின் அனைத்துலக அமைப்புகள் விவகாரங்களுக்கான பிரதி உதவிச் செயலர் எரின் பார்க்லே இன்று உரையாற்றவுள்ளார்.
அமெரிக்காவில் ஆட்சிமாற்றத்துக்குப் பின்னர், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கப் பிரதிநிதி நிகழ்த்தவுள்ள இந்த உரை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் பிரதி உதவிச் செயலர் எரின் பார்க்லே தனது உரையில் சிறிலங்கா தொடர்பான அமெரிக்க நிலைப்பாட்டை வெளிப்படுத்தக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.