இலங்கையர்களுக்கான நுழைவிசைவு கொள்கையில் மாற்றமில்லை – அமெரிக்கா
இலங்கையர்களுக்கான அமெரிக்க நுழைவிசைவு கொள்கையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
இலங்கையர்கள் அமெரிக்காவுக்கு நுழைவிசைவு இன்றிப் பயணிக்கலாம் என்று பரவிய வதந்திகளை அடுத்தே, அமெரிக்க தூதரகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இலங்கையர்களுக்கான அமெரிக்க நுழைவிசைவு கொள்கை தொடர்பாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதுதொடர்பாக பரவும் வதந்திகள் முற்றிலும் பொய்யானவை என்றும் அமெரிக்க தூதரக கீச்சக பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, சிறிலங்காவுக்கு நுழைவிசைவு இல்லாமல் பயணிக்கலாம் என்ற கொள்கையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கையெழுத்திட்டிருப்பதாகவும், இலங்கையர்கள் நுழைவிசைவு இல்லாமல் அமெரிக்காவுக்குப் பயணம் செய்ய அனுமதிக்குமாறு நிறைவேற்று அதிகார ஆணையை அவர் வழங்கியுள்ளதாகவும் இணையத்தளம் ஒன்றில் செய்தி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.