மைத்திரியை வேட்பாளராக நிறுத்த முடிவெடுக்கவில்லை – சந்திரிகா
அடுத்த அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராக நிறுத்துவது தொடர்பாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே சந்திரிகா குமாரதுங்க இவ்வாறு தெரிவித்தார்.
அடுத்த அதிபர் தேர்தல் தொடர்பாக கட்சியிலுள்ள அமைச்சர்கள் சிலரே தமது யோசனையை வெளிப்படுத்தியுள்ளனர்.
மைத்திரிபால சிறிசேன, தனது பதவிக்காலத்துக்குப் பின்னர் நிறைவேற்று அதிகாரமுள்ள அதிபர் பதவியை இல்லாதொழிப்பதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்” என்றும் சந்திரிகா குமாரதுங்க கூறியுள்ளார்.
அதேவேளை, அடுத்த அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராக நிறுத்துவதென சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு முடிவெடுத்திருப்பதாக அமைச்சர் சரத் அமுனுகம பிபிசி சிங்கள சேவைக்கு கூறியிருந்தார்.
அந்தக் கூட்டத்துக்கு மைத்திரிபால சிறிசேனவே தலைமை தாங்கினார் என்றும், அவர் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை என்றும் சரத் அமுனுகம தெரிவித்திருந்தார்.
சரத் அமுனுகம வெளியிட்ட இந்த தகவலை அனுராதபுரவில் நேற்றுமுன்தினம் சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் துமிந்த திசநாயக்க உறுதிப்படுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.