பிராந்திய விமான நிலையமாக விரிவாக்கப்படும் பலாலி – சிறிலங்கா பிரதமர்
தென்னிந்தியாவுக்கும் விமான சேவைகளை மேற்கொள்ளும் வகையில், பலாலி விமான நிலையம், பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கூட்டு அரசாங்கத்தின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக கொழும்பில் இன்று அறிவித்த போதே சிறிலங்கா பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
‘இந்தியத் தூதுவராக தரன்ஜித் சிங் சந்து பதவியேற்ற பின்னர், தென்னிந்தியாவுடனான தொடர்புகளை மேலும் விருத்தி செய்யும் வகையில், காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது குறித்து கலந்துரையாடப்படும்.
திருகோணமலைத் துறைமுகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்கள் இந்தியா, சிங்கப்பூர், ஜப்பானிய முதலீடுகளின் மூலம் அபிவிருத்தி செய்யப்படும்.
இந்த ஆண்டில் இந்தியாவுடன் எட்கா உடன்பாடும், சீனா, சிங்கப்பூர், ஜப்பானுடன் சுதந்திர வர்த்தக உடன்பாடுகளும் செய்து கொள்ளப்படும்.
சிறிலங்காவை ஒரு விநியோக, தகவல் தொழில்நுட்ப, இரத்திரனியல் கேந்திரமாக மாற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இந்த ஆண்டில் 2 தொடக்கம் 3 பில்லியன் டொலர் வெளிநாட்டு முதலீடுகளை பெறமுடியும் என்று நம்புகிறோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.