சிறிலங்காவின் தேயிலை ஏற்றுமதி – இரண்டு பத்தாண்டுகளில் இல்லாத மோசமான வீழ்ச்சி
சிறிலங்காவின் தேயிலை ஏற்றுமதி கடந்த நொவம்பர் மாதம் பாரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. 1998ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிகக் குறைந்தளவு தேயிலை கடந்த மாதத்தில் ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதாக அதிகாரபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த நொவம்பர் மாதத்தில், 20.4 மில்லியன் கிலோ தேயிலை மாத்திரமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், 22 வீத வீழ்ச்சியாகும்.
கடந்த 2015ஆம் ஆண்டு நொவம்பரில், 26.3 மில்லியன் கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது. இதற்கு முன்னர், 1998ஆம் ஆண்டு நொவம்பர் மாதத்தில், 21.9 மில்லியன் கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டதே குறைந்தளவாக இருந்தது.
அதனை விடவும் இந்த ஆண்டு நொவம்பர் மாதத்தில் குறைந்தளவே ஏற்றுமதி இடம்பெற்றுள்ளது.
2016ஆம் ஆண்டிலேயே, மிகக் குறைந்தளவு தேயிலை ஏற்றுமதி, கடந்த நொவம்பர் மாதத்தில் இடம்பெற்றுள்ளது.
அதேவேளை, கடந்த ஆண்டு ஜனவரி தொடக்கம் நொவம்பர் மாதம் வரை, 281.5 மில்லியன் கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு, இதே காலப்பகுதியில், 266.1 மில்லியன் கிலோ தேயிலையே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 5 வீத வீழ்ச்சியாகும்.
சிறிலங்காவின் தேயிலையை இறக்குமதி செய்யும் நாடுகளில், ரஸ்யா, ஈரான், ஈராக், சிரியா, லிபியா, சீனா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளுக்கான தேயிலை ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
எனினும், துருக்கி, ஜப்பான், சிலி உள்ளிட்ட நாடுகளுக்கான தேயிலை ஏற்றுமதி குறைந்துள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.