ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை; மரணமானதாக வெளியான செய்தி தவறு – அப்பல்லோ அறிக்கை
தமி்ழ்நாடு முதல்வர் ஜெயலலிதா காலமாகி விட்டதாக அதிகாரபூர்வமற்ற செய்திகள் வெளியாகிய நிலையில், அப்பல்லோ மருத்துவமனை சற்று முன்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயலலிதாவுக்கு தொடர்ந்தும் உயிர்காப்பு மருத்துவ கருவிகளின் துணையுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
முதலமைச்சரைக் காப்பாற்ற டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களுடன் இணைந்து அப்பல்லோ மருத்துவர்கள் முயற்சி செய்து வருவதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மேலும் முதலமைச்சர் மரணமானதாக வெளியான தகவல் அடிப்படையற்றது, தவறானது என்றும் அப்பல்லோ மருத்துவமனையின் நிர்வாகி மருத்துவர் சுப்பையா விஸ்வநாதன் அறிவித்துள்ளார்.
இதையடுத்து அதிமுகவினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, அதிமுக தலைமையகத்தில் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்ட கட்சியின் கொடி மீண்டும் வழக்கமான உயரத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.