தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா காலமானார் – அப்பல்லோ அதிகாரபூர்வமாக அறிவிப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா (வயது-68) காலமானார் என்று அப்பல்லோ மருத்துவமனையின் சார்பில் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதயம் செயலிழந்து போனதால், 2016 டிசெம்பர் 05ஆம் திகதி திங்கட்கிழமை இரவு 11.30 மணியளவில் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா காலமாகி விட்டார் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
டிசெம்பர் 06ஆம் நாள் அதிகாலை 12.15 மணியளவில் இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஜெயலலிதாவின் உடல் இன்றும் சற்று நேரத்தில் அவரது இல்லமான போயஸ் தோட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் இராஜாஜி மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
தமிழ்நாட்டில் செவ்வாய் தொடக்கம் வியாழன் வரையான மூன்று நாட்களும் துக்கநாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று நாட்களிலும், பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அதிமுக தலைமையகத்தில் தற்போது நடந்து வரும் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில், புதிய சட்டமன்றக் குழு தலைவராக ஓ.பன்னீர்ச்செல்வம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அவர் தமிழ்நாடு மாநில ஆளுனர் வித்தியாசாகர்ராவ் முன்னிலையில் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ளார்.