சிறிலங்கா அதிபருக்கு அமெரிக்க தளபதி அட்மிரல் ஹரிஸ் அளித்துள்ள உறுதிமொழி
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த, அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத்தின் தளபதி அட்மிரல் ஹரி ஹரிஸ் நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
காலி கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக, மூன்று நாள் பயணமாக கடந்த 28ஆம் நாள் கொழும்பு வந்த அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத்தின் தளபதி அட்மிரல் ஹரி ஹரிஸ், நேற்று சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார்.
இதன்போது, சிறிலங்காவுடன் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதில் அமெரிக்கா உறுதிபூண்டுள்ளதாகவும், பசுபிக் கட்டளைப் பீடமும் இதில் இணைந்து கொள்வதாகவும், சிறிலங்கா அதிபரிடம் அட்மிரல் ஹரிஸ் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சிறிலங்கா பிரதமர், வெளிவிவகார அமைச்சர், மற்றும் முப்படைகளின் தளபதிகளையும், அட்மிரல் ஹரிஸ் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.