ஆவா குழுவில் 62 பேர், 38 பேர் இதுவரை கைது – நாடாளுமன்றில் தகவல்
வடக்கில் குழப்ப நிலையை ஏற்படுத்தும் நோக்கில் செயற்பட்ட ஆவா குழுவைச் சேர்ந்த 38 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஆவா குழு தொடர்பாக, ஜேவிபி தலைவர் அனுரகுமார திசநாயக்க எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் சாகல ரத்நாயக்க-
“ஆவா குழுவில் 62 பேர் இருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவர்களில் 38 பேர் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்தக் குழுவைச் சேர்ந்த எட்டு தலைவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தக் குழுவினரால் பயன்படுத்தப்பட்ட வாள் ஒன்று பிரேசிலில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த வாள் போன்று உள்நாட்டிலும் தயாரிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் ஒப்பந்த அடிப்படையில் குற்றச்செயல்களில் ஈடுபடுவதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றும் அவர் தெரிவித்தார்.