சீனத் தூதுவர் சிறந்த நண்பர்; ஊடகங்களே முரண்பாடுகளுக்கு முன்னுரிமை- மங்கள சமரவீர
சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் நல்லதொரு நண்பர் என்றும், ஊடகங்களே எப்போதும், முரண்பாடுகளுக்கும், மோதல்களுக்கும் முன்னுரிமை கொடுத்து வருவதாகவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
தி ஹிந்து ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே இவர் இதனைக் கூறியுள்ளார்.
“சிறிலங்காவுக்கு சீனா வழங்கிய கடன்கள் தொடர்பாக, சிறிலங்கா நிதியமைச்சரின் கருத்துக்களை விமர்சித்து அண்மையில் சீனத் தூதுவர் யி ஷியாங்லியாங் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.
இந்த விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்,
சீனா மிகச் சிறந்த நண்பன். மற்றும் சிறிலங்காவுடன் நூற்றாண்டுகளாக தொடர்புகளை வைத்துள்ள அண்டை நாடு. சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தியில் சீனா முக்கியமான பங்காளி.
சீனத் தூதுவரும் கூட எனது நல்ல நண்பர். ஊடகங்கள் எப்போதுமே முரண்பாடுகளையும், கருத்து வேறுபாடுகளையும் தான் முன்னுரிமைப்படுத்தும்.
அண்மையில் அவரை நான் சந்தித்த போது, ஒரு ஆலோசனையை கூறியிருந்தேன்.
எமது அரசியல் தலைவர்களின் அறிக்கைகள் தொடர்பாக ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், ஊடகங்கள் மூலம் அதனைத் தீர்ப்பதற்குப் பதிலாக வெளிவிவகார அமைச்சின் ஊடாக அந்த குறைகளைத் தீர்த்துக் கொள்ளுமாறும், அவரிடம் கூறியிருந்தேன்.
ஏனென்றால், ஊடகங்கள் எப்போதுமே, முரண்பாடுகள், மோதல்களுக்கே முன்னுரிமை கொடுப்பவை.” என்றும் அவர் கூறியுள்ளார்.