வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசாவை பதவியில் இருந்து நீக்குமாறு டக்ளஸ் பரிந்துரை
வடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவரான சி.தவராசாவை அந்தப் பதவியில் இருந்து நீக்குமாறு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலருக்கு, ஈபிடிபியின் பொதுச்செயலரான டக்ளஸ் தேவானந்தா கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சி.தவராசாவை வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்கி விட்டு, அவருக்குப் பதிலாக, கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட தவநாதனை நியமிக்குமாறும் டக்ளஸ் தேவானந்தா கோரியுள்ளார்.
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பட்டியலிலேயே ஈபிடிபி போட்டியிட்டு இரண்டு ஆசனங்களை வென்றிருந்தது.
எனவே, எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து தவராசாவை நீக்குவது தொடர்பாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
தம்மை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக கடிதம் எழுதப்பட்டதாக தாமும் அறிந்ததாக தவராசா தெரிவித்துள்ளார்.
எனினும், டக்ளஸ் தேவானந்தாவின் இந்த முடிவுக்கான காரணம் ஏதும் வெளியாகவில்லை.
ஈபிடிபிக்குள் நிலவும் உள்முரண்பாடுகளே இந்த முடிவுக்கு காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
ஈபிடிபியின் ஆரம்பமாக உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சந்திரகுமார் அண்மையில் அந்தக் கட்சியை விட்டு வெளியேறியிருந்தார்.
இந்த நிலையில், டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசகராகப் பணியாற்றிய தவராசாவை வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்க எடுத்துள்ள நடவடிக்கை அந்தக் கட்சிக்குள் மேலும் பிளவுகளை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.