சிறிலங்கா அரசாங்கத்தின் வரவுசெலவுத்திட்டம் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விசனம்
சிறிலங்கா அரசாங்கத்தின் அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம், இன நல்லிணக்கத்துக்கு அவசியமான விடயங்களைப் புறக்கணித்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“வரவுசெலவுத் திட்டம் தொடர்பாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசனைகளைப் பெற்றிருந்த போதிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆலோசனைகளைக் கோரவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கலந்தாலோசிக்கப்படாத, இந்த வரவு-செலவுத் திட்டம் நல்லிணக்க விடயங்களில் அக்கறையற்றதன்மையைப் பிரதிபலிக்கிறது.
பெரியளவிலான வர்த்தகத் திட்டங்களை ஊக்குவிக்கும் வகையில் வரவுசெலவுத் திட்டம் அமைந்துள்ள போதிலும், வேலை வழங்குனர்களுக்கு சாதகமாக இல்லை.
போரினால் அழிந்த வடக்கு மாகாணத்தில் மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்ய போராடி வருகின்ற நிலையில், அவர்களுக்கு வரவுசெலவுத்திட்டம் எந்த வாழ்வாதாரங்களையும் வழங்கவில்லை.
யாழ்ப்பாணத்தில் 1 பில்லியன் ரூபா செலவில் வணிக நிறுவனங்களுக்காக நவீன வசதிகளுடன் கூடிய கட்டடத்தொகுதி அமைக்கப்படுவதற்கு வரவுசெலவுத்திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இது உள்ளூர் மக்களின் தேவைகளுக்கு உதவாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.