பிரிகேடியர் சுரேஸ் சாலியின் கீழ் செயற்பட்ட இரண்டு இராணுவப் புலனாய்வு பிரிவுகள் கலைப்பு
இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் பதவியில் இருந்து, பிரிகேடியர் சுரேஸ் சாலி நீக்கப்பட்டதையடுத்து. இராணுவப் புலனாய்வுப் பணியகத்தின் கீழ் செயற்பட்ட இரண்டு பிரிவுகள் கலைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்தவாரம் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் பதவியில் இருந்து பிரிகேடியர் சுரேஸ் சாலி நீக்கப்பட்டு, பிரிகேடியர் விஜேந்திர குணதிலக அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
பிரிகேடியர் சுரேஸ் சாலி நீக்கப்பட்டதையடுத்தே, அவருக்குக் கீழ் செயற்பட்ட இரண்டு புலனாய்வுப் பிரிவுகள் கலைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிரிகேடியர் சுரேஸ் சாலி மீதான நம்பிக்கை இழக்கப்பட்டதையடுத்தே அவர் இந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்றும், பிரிகேடியர் சாலியின் நீக்கத்துக்கு, யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்களும் ஒரு காரணம் என்றும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்ட முன்னைய ஆட்சியாளர்களுடன், பிரிகேடியர் சுரேஸ் சாலி நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்தார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அதேவேளை புதிதாக இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட பிரிகேடியர் விஜேந்திர குணதிலக, முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு நெருக்கமானவராவார்.