சிறிலங்கா இன்னும் அதிகம் செய்ய வேண்டும் – கனேடிய வெளிவிவகார அமைச்சர்
சிறிலங்காவின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், அபிவிருத்திக்கு உதவ கனடா தயாராக இருப்பதாக, கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியன் தெரிவித்தார்.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியன் நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் மனோ கணேசன் உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
நேற்று பிற்பகல் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்குச் சென்ற கனேடிய வெளிவிவகார அமைச்சர், ஸ்டீபன் டியன், சிறிலங்காவின் வெளிவிகார அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்துப் பேசினார்.
இதன் பின்னர், இருநாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
இதன்போது கருத்து வெளியிட்ட கனேடிய வெளிவிவகார அமைச்சர், மனித உரிமைகள் நிலையை முன்னேற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து திருப்தி வெளியிட்டார்.
காணாமற்போனோர் செயலகம், காணிகள் விடுவிப்பு உள்ளிட்ட சிறிலங்கா அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளைப் பாராட்டிய அவர், இன்னும் அதிகமான விடயங்களைச் செய்ய வேண்டியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
நல்லிணக்கச் செயல்முறையில் எல்லா இன மற்றும் மதங்களைப் பின்பற்றும் மக்களும் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.