சிறிலங்காவிடம் இருந்து வெடிபொருட்களை மீளப்பெற சீன நிறுவனம் மறுப்பு
சிறிலங்கா அரசாங்கத்துக்கு வெடிபொருட்களை விநியோகம் செய்த சீன ஆயுத ஏற்றுமதி நிறுவனம், மீதமுள்ள வெடிபொருட்களை மீளப்பெற்றுக் கொள்ள மறுத்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
பொருத்தமான நிலையில் இந்த வெடிபொருட்கள் சேமிக்கப்படாததால், இந்த வெடிபொருட்களின் ஆயுள்காலம் பெரும்பாலும் முடிந்து விட்டதாலேயே, இவற்றை மீளப் பெற்றுக் கொள்ள சீன நிறுவனம் மறுத்துள்ளது.
இந்த ஆயுதங்கள் வெடிபொருட்கள் சிலவற்றைப் பரிசோதனை செய்த சீன நிறுவனம், அவை காலாவதியாகும் நிலையில் உள்ளதாக தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோசமான நிலையில் இந்த வெடிபொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்ததால், அவை எதிர்காலத்தில் பயன்படுத்தக் கூடிய திறனை இழந்துள்ளன என்று சீனர்கள் கண்டறிந்துள்ளனர். இதனால் அவற்றை திரும்பப் பெற்றுக்கொள்ள அவர்கள் மறுத்துள்ளனர்.
இதுதொடர்பாக, சிறிலங்கா இராணுவப் பேச்சாளரிடம் கேள்வி எழுப்பிய போது, அதுபற்றிய போதிய தகவல்கள் தன்னிடம் இல்லை என்று பதிலளித்துள்ளார்.
அதேவேளை, காலாவதியாகும் நிலையில் உள்ள ஆயுதங்கள் வெடிபொருட்களை விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதுதொடர்பான செயல்முறைகள் இடம்பெற்று வருவதாகவும் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.
எனினும் மேலதிக கருத்துக்களை வெளியிட அவர் மறுத்துள்ளார்.