உதய கம்மன்பில கைது – ஜூலை 1 வரை விளக்கமறியல்
பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில சிறிலங்கா காவல்துறையின் சிறப்பு விசாரணைப் பிரிவினரால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
பாகொடவில் உள்ள பணியகத்தில் வைத்து கைது செய்யப்பட்ட தம்மை, சிறப்பு விசாரணைப் பிரிவினர் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அவுஸ்ரேலிய நிறுவனம் ஒன்றின் பங்குகளை மோசடியான முறையில் விற்பனை செய்த விவகாரம் தொடர்பாகவே உதய கம்மன்பில கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
அதேவேளை, கைது செய்யப்பட்ட உதய கம்மன்பில, கோட்டே நீதிவான் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போது, அவரை எதிர்வரும் ஜூலை 1ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து அவர் வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.