மேலும்

இந்தியாவில் இருந்து புறப்பட்ட 44 இலங்கைத் தமிழ் அகதிகள் இந்தோனேசிய கடலில் தத்தளிப்பு

indonesia-tamils-boat (3)இலங்கைத் தமிழ் அகதிகள் 44 பேருடன், அவுஸ்ரேலியாவில் புகலிடம் தேடும் நோக்கில், இந்தியாவில் இருந்து புறப்பட்ட படகு ஒன்று இந்தோனேசியக் கடற்பரப்பில் இயந்திரக் கோளாறினால் தத்தளிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியதேசியக் கொடி மற்றும் தமிழ்நாடு பதிவு எண்ணைக் கொண்ட இந்தப் படகு, ஒரு மாதத்துக்கு முன்னர், அவுஸ்ரேலியா நோக்கிப் புறப்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம், காலை 10 மணியளவில் இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தின், லொஹொக்கா கடற்கரைக்கு அப்பால், இந்தப் படகு தத்தளித்துக் கொண்டிருந்த போது, உள்ளூர் மீனவர்கள் அதனைக் கண்டனர்.

அவர்கள் உடனடியாக, இதுபற்றி அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியதையடுத்து, இந்தோனேசிய அதிகாரிகளும், இராணுவ அதிகாரிகளும் படகுக்குச் சென்று விசாரணை நடத்தினர். அத்துடன் உதவிப் பொருட்களையும் வழங்கியுள்ளனர்.

இந்தப் படகில், 9 சிறுவர்கள் உள்ளிட்ட 44 பேர் உள்ளனர். அவர்களில் ஒரு கர்ப்பிணி உள்ளிட்ட 15 பேர் பெண்களாவர்.

indonesia-tamils-boat (1)indonesia-tamils-boat (2)indonesia-tamils-boat (3)indonesia-tamils-boat (4)

indonesia-tamils-boat (5)indonesia-tamils-boat (6)

இந்தப் படகிற்குச் சென்று விசாரணை நடத்திய இந்தோனேசிய இராணுவ அதிகாரியான மேஜர் தருல் அமின் இதுபற்றி தகவல் வெளியிடுகையில்,

“ஒரு மாதத்துக்கு முன்னர் இந்தப் படகு, இந்தியாவில் இருந்து அவுஸ்ரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுக்குப் புறப்பட்டுள்ளது.

இந்தப் படகு நல்ல நிலையில் உள்ளது. இயந்திரத்தில் தான் கோளாறு ஏற்பட்டுள்ளது. இவர்கள் 24 மணிநேரமாக இந்தோனேசியக் கடற்பரப்பில் தத்தளிக்கின்றனர்.

எல்லா அகதிகளும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கின்றனர். அவர்களுக்குத் தேவையான உணவு, எரிபொருள், குடிநீர் போன்ற விநியோகப் பொருட்கள் படகில் உள்ளன.” என்று தெரிவித்தார்.

அதேவேளை, இந்தப் படகில் உள்ளவர்கள் இந்தோனேசியாவில் தரையிறங்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று இந்தோனேசிய  குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் படகை அனைத்துலக கடற்பரப்புக்குத் திருப்பி அனுப்ப இந்தோனேசிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எனினும், கடுமையான காற்றும், கடற் கொந்தளிப்பும் இருப்பதால், தாமதம் ஏற்பட்டுள்ளது. இவர்களை மீண்டும் சொந்த நாட்டுக்கே திரும்பிச் செல்லுமாறு இந்தோனேசிய அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

எனினும், தாம் அவுஸ்ரேலியா செல்லப் போவதாக படகில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *