மகிந்த வாக்களிக்காததன் மர்மம் – விளக்குகிறார் கம்மன்பில
தனது பொன்னான நேரத்தைச் செலவிடுவதற்கு பெறுமதியற்றது என்பதால் தான், நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச பங்கேற்கவில்லை என்று, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணியினரால் கொண்டு வரப்பட்ட நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு, நேற்றுமுன்தினம் நடந்த போது, மகிந்த ராஜபக்ச பங்கேற்காதமை குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்திருந்தன.
இந்த நிலையில், நேற்று நாடாளுமன்ற வாளகத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த, கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர், உதய கம்மன்பில,
“நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்சவின் வாக்கு, ஒரு வாக்கு மட்டும் தான். ஆனால், அவர் ஒரு மிகப்பெரிய ஆளுமை மிக்க, இந்த நாட்டின் சிறப்புமிக்க குடிமகன்.
அவரது வாக்கு சிறப்பானதாக இருக்க வேண்டும். அவரது வாக்கு இறுதி முடிவை மாற்ற முடியாதது என்றால், அவரை நாடாளுமன்றம் வருமாறு கேட்பது பயனற்றது.
அவர் வரவுசெலவுத் திட்டங்களின் போது கூட வாக்களிக்கவில்லை.
வாக்களிப்பதற்காக மகிந்த ராஜபக்ச சபையில் இருக்க வேண்டும் என்றால், அது, அரசியல் அதிகாரத்தைக் கைமாற்றும் முக்கியமான தருணம் ஒன்றில் தான் சாத்தியமாகும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.