சிறிலங்காவில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு ஜி-7 நாடுகளின் தலைவர்களிடம் கோரிக்கை
சிறிலங்காவில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு, ஜி-7 நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜப்பானின் இசே ஷிமா நகரில் நடைபெறும் ஜி-7 நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.
“எமது விரிவான அபிவிருத்தி முயற்சிகளுக்கு நிதிப்பற்றாக்குறை உள்ளது.எனவே, அபிவிருத்தி அடைந்த நாடுகள், பலதரப்பு மற்றும் இருதரப்பு முதலீட்டாளர்கள், சிறிலங்காவில் முதலீடு செய்யக் கோருகிறோம்.” என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொரளாதார மாற்றங்கள் தொடர்பாகவும், மனித உரிமை நிலைமைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் அவர் விபரித்துள்ளார்.
இந்த மாநாட்டில் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், மற்றும் ஜி-7 நாடுகளின் தலைவர்களான, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன், ஜேர்மனி அதிபர் ஏஞ்சலா மார்க்கல், பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹொலன்ட், கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ரூடே, இத்தாலியப் பிரதமர் மற்ரோ ரென்சி ஆகியோரையும் சிறிலங்கா அதிபர் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.