ஆறாவது தடவையாக முதலமைச்சராகப் பதவியேற்றார் ஜெயலலிதா
தமிழ்நாடு முதலமைச்சராக- ஆறாவது தடவையாக, செல்வி ஜெயலலிதா இன்று நண்பகல் பதவியேற்றார். சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில், கோலாகலமாக நடந்த நிகழ்வில், மாநில ஆளுனர் ரோசய்யா முன்னிலையில், ஜெயலலிதா பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
அதையடுத்து, புதிய அமைச்சர்கள் 28 பேரும் இரண்டு கட்டங்களாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
இந்த நிகழ்வில், மத்திய அமைச்சர்கள் பொன்.இராதாகிருஸ்ணன், வெங்கைய நாயுடு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினும் இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்றார். எனினும், அவருக்கு 10 ஆவது வரிசையிலேயே இடம் ஒதுக்கப்பட்டிருந்தது, குறித்து தி.மு.க தலைவர் கருணாநிதி அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
அதேவேளை, இன்று நண்பகல் முதலமைச்சராக மீண்டும் பதவியேற்ற ஜெயலலிதா உடனடியாக தலைமைச் செயலகத்துக்குச் சென்று, ஐந்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஆணைகளில் கையெழுத்திட்டுள்ளார்.