அமெரிக்காவின் முன்னாள் பிரதி இராஜாங்கச் செயலர் ஆர்மிரேஜ் சம்பந்தனுடன் சந்திப்பு
சிறிலங்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் முன்னாள் பிரதி இராஜாங்கச் செயலர் ரிச்சர்ட் ஆர்மிரேஜ், நேற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
சிறிலங்கா நாடாளுமன்றில் உள்ள, எதிர்க்கட்சி தலைவரின் செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பின் போது, தமிழ் மக்களின் தற்போதைய நிலை குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதாக, எதிர்க்கட்சித் தலைவரின் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் தனியார் காணிகளின் விடுவிப்பு, பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக, அமெரிக்காவின் முன்னாள் பிரதி இராஜாங்க செயலருக்கு, இரா.சம்பந்தன் தெளிவுபடுத்தியுள்ளார்.
தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளாக காணப்படும் இந்தவிடயங்கள் தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் ஆர்வமாகவும் வேகமாவும் செயற்ப்பட வேண்டும் என்றும், இந்தவிடயங்கள் தொடர்பில் உடனடி நிவாரணங்கள் தீர்வுகளை வழங்குவதிலிருந்து சிறிலங்கா அரசாங்கம் விலகி நிற்க முடியாது என்றும் அவர் எடுத்துரைத்துள்ளார்.
புதிய அரசியல் யாப்பில் தேசிய பிரச்சினைக்கு எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நிரந்தர தீர்வு ஒன்றை எட்டுவது மிகவும் அவசியமானது என்பதையும் இரா.சம்பந்தன் எடுத்துக் கூறியுள்ளார்.
இந்தச் சந்திப்பில், நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டிருந்தார்.