இலங்கைத் தமிழர் விவகாரத்தை கைகழுவியது இந்தியா
இந்தியாவிலும், சிறிலங்காவிலும், 2014ஆம் ஆண்டுக்கு பின், அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை அடுத்து, இரு நாடுகளுக்கு இடையிலும் நீண்டகாலமாக விவாதிக்கப்பட்டு வந்த, இலங்கைத் தமிழர் விவகாரம், முக்கியத்துவத்தை இழந்து விட்டதாக, இந்தியாவின் மூத்த ஊடகவியலாளர் மோகன் கே.ரிக்கு எழுதியுள்ள நூலில் கூறப்பட்டுள்ளது.
மூத்த ஊடகவியலாளர் மோகன் கே.ரிக்கு (Mohan K. Tikku) எழுதியுள்ள, “After the Fall: Sri Lanka in Victory and War” என்ற நூல் அண்மையில் வெளியானது.
அதில், “கடந்த, 1983ல், சிறிலங்காவில், தமிழர்களுக்கு எதிரான கலவரங்கள் அதிகரித்தபோது, அப்போதைய இந்திய அரசு தலையிட்டு, பிரச்னைக்கு தீர்வு காண முற்பட்டது. அன்று முதல், ஒன்றுபட்ட சிறிலங்காவில், கூட்டாட்சி கட்டமைப்புக்குள், தமிழர்களுக்கு சமஅதிகாரம் கிடைக்கச் செய்யும் வகையில், சிறிலங்கா அரசை, இந்தியா வலியுறுத்தி வந்தது.
கடந்த, 1987ல், இந்தியா – சிறிலங்கா இடையே ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்திலும், அந்த கருத்துக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.
சிறிலங்கா அதிபராக, மகிந்த ராஜபக்ச பதவியில் இருந்தபோது, முந்தைய முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. தமிழர்களுக்கு சுய அதிகாரம் வழங்கும் முயற்சிகளை மீண்டும் துவக்க வேண்டிய நிர்ப்பந்தம்ஏற்பட்டது.
சீனாவின் ஆதிக்கம், மியான்மர், சிறிலங்கா நாடுகளில் அதிகரித்து வந்ததால், தமிழர் பிரச்னைக்கான முக்கியத்துவத்தை, இந்திய அரசு விட்டுக் கொடுக்க வேண்டிய சூழல் உருவானது.
இந்தச்சூழ்நிலையில், சிறிலங்காவுடனான உறவுகள் விடயத்தில், இந்தியா, தனது போக்கை மாற்ற முடிவு செய்து உள்ளது.
இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்கு பதில், பிராந்தியத்தின், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.
இதனால், சிறிலங்காவுடனான நட்புறவு விடயத்தில்,கடற்பகுதி பாதுகாப்புக்கு, இந்தியா முக்கியத் துவம் தருகிறது.” என்று கூறப்பட்டுள்ளது.