மேஜர் ஜெனரல் மானவடுவின் மரணம் கர்மவினை என்கிறார் சரத் பொன்சேகா
மேஜர் ஜெனரல் சுமித் மானவடுவின் மரணம், அவரது கர்மவினை என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.
கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், மேஜர் ஜெனரல் மானவடுவின் மரணம் தொடர்பாக கருத்து வெளியிட்ட அவர்,
பௌத்தம் மீது நம்பிக்கையுள்ளவன் என்ற வகையில், கர்மவினை பற்றி நம்புகிறேன்.
2010ஆம் ஆண்டு, அதிபர் தேர்தலுக்குப் பின்னர், சிலர் கூறுவது போன்று நான் தங்கியிருந்த விடுதியில் வைத்துக் கைது செய்யப்படவில்லை.
மேஜர் ஜெனரல் சுமித் மானவடு 500 படையினருடன், விடுதிக்கு வெளியே காத்திருந்து, என்னைச் சந்திக்க வந்தவர்களை கைது செய்தார்.
ரோயல் கல்லூரிக்கு முன்பாக இருந்த எனது பணியகத்தில், அரசியல்வாதிகள் பலருடன் கலந்துரையாடிக் கொண்டிருந்த போதே என்னைக் கைது செய்தார்கள்.
மேஜர் ஜெனரல் மானவடு தொடர்பாக அதிகம் கருத்துக் கூறும் எண்ணம் எனக்கில்லை.
ஆனால், அவரது மரணம், எதிர்பாராத ஒரு துயர நிகழ்வு” என்று குறிப்பிட்டார்.