மகிந்த மீது ஒழுங்கு நடவடிக்கை இல்லை – சிறிலங்கா சுதந்திரக் கட்சி குத்துக்கரணம்
கிருலப்பனையில் நடந்த கூட்டு எதிரணியின் மேநாள் பேரணி மற்றும் கூட்டத்தில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது சிறிலங்கா சுதந்திரக் கட்சி எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்காது என்று, அந்தக் கட்சியின் பேச்சாளரான அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர்,
காலியில் சுதந்திரக் கட்சி நடத்திய மேநாள் பேரணியைப் புறக்கணித்து, கிருலப்பனையில் கூட்டு எதிரணி நடத்திய மேநாள் பேரணியில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சிறிலங்கா சுதந்திரக் கட்சி நடவடிக்கை எடுக்காது.
ஒரு சிலரைத் தவிர, கிருலப்பனை பேரணிக்குச் சென்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் ஒழுக்கத்தை மீறவில்லை.” என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கிருலப்பனையில் கூட்டு எதிரணியினரின் கிருலப்பனை பேரணியில் பங்கேற்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்தக் கட்சியின் செயலர் துமிந்த திசநாயக்கவும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் மகிந்த அமரவீரவும் கடுமையாக எச்சரித்திருந்தனர்.
எனினும், அதனை மீறி, அந்தக் கூட்டத்தில் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட 41 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கி்ருலப்பனை கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.