சுதந்திரக் கட்சி முக்கிய தலைவர்களுடன் மைத்திரி இன்று அவசர சந்திப்பு
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் 10பேருடன், கட்சியின் தலைவரும் சிறிலங்கா அதிபருமான மைத்திரிபால சிறிசேன இன்று அவசர கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன இன்றிரவு பிரித்தானியாவுக்கான பயணத்தை மேற்கொள்வதற்கு முன்னதாக, இன்று மாலை 7 மணியளவில், சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இந்தச் சந்திப்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மிக முக்கியமான 10 தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற, மாகாணசபை, உள்ளூராட்சி சபை உறுப்பினர்களில் சிலர், கூட்டு எதிரணியின் மேநாள் பேரணியில் பங்கேற்றமை, கட்சித் தலைமைக்கு எதிரான விமர்சனங்கள், கட்சித் தலைமையின் அனுமதியின்றி செய்தியாளர் சந்திப்புகள், போராட்டங்களை நடத்துதல் என்பன குறித்தே இந்தக் கூட்டத்தில் முக்கியமாக ஆராயப்படவுள்ளது.
அதேவேளை, கட்சியின் ஒழுக்க விதிகளை மீறும் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அதிகாரம் உள்ள போதிலும், இந்த விவகாரத்தை அவர் கட்சியின் மத்திய குழுவுக்கு அனுப்ப முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.