மைத்திரியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்தியா
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை இம்மாத நடுப்பகுதியில் இந்தியா வருமாறு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜெயினில் அனைத்து மத நிகழ்வு ஒன்று எதிர்வரும் 12ஆம் நாள் தொடக்கம், 14ஆம் நாள் வரை நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வின் இறுதி நாளான வரும் 14ஆம் நாள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொள்ளவுள்ளார்.
இதில் பங்கேற்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு சிறிலங்கா அதிபர் இந்தியா வந்தால், அவருடன் புதுடெல்லியில் இருதரப்பு பேச்சுக்களை நடத்தவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சீனாவுடன் அண்மையில் ஏற்பட்டுள்ள இணக்கப்பாடுகள் மற்றும் எட்கா உடன்பாடு உள்ளிட்ட விடயங்களில் சிறிலங்கா அதிபருடன் பேச்சுக்களை நடத்துவதற்கு இந்தியா எதிர்பார்த்துள்ளதாக புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.