அமெரிக்காவிடம் இருந்து கோத்தாவைப் பாதுகாக்கும் சிறிலங்கா அரசு
சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை கைது செய்யுமாறு அமெரிக்காவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு, சிறிலங்கா அரசாங்கம் ஆதரவளிக்காது என்று சிறிலங்கா அமைச்சர் கபீர் காசிம் தெரிவித்துள்ளார்.
“சிறிலங்கா குடிமகன் ஒருவர் மீது உள்நாட்டு விவகாரம் தொடர்பாக எத்தகைய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தாலும், அந்த விவகாரம், உள்நாட்டுச் சட்டங்களின் கீழ் தான் கையாளப்பட வேண்டும்.
உள்நாட்டு விவகாரங்களை அனைத்துலக சக்திகள் கையாள்வதற்கு அனுமதிக்க முடியாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற மீறல்களுக்குப் பொறுப்பானவரான, கோத்தாபய ராஜபக்ச தற்போது, அமெரிக்கா சென்றுள்ள நிலையில், அவரைக் கைது செய்யுமாறு அமெரிக்க அதிபரிடம், இரண்டு தமிழ் அமைப்புகள், வேண்டுகோள் விடுத்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.