ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுவிக்க இந்திய மத்திய அரசு மறுப்பு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும், நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரை விடுவிக்க தமிழ்நாடு அரசு எடுத்த முடிவை, இந்திய மத்திய அரசு நிராகரித்துள்ளது.
இது குறித்து ‘தி ஹிந்து’ ஆங்கில நாளிதழுக்கு இந்திய மத்திய உள் துறை அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,
தமிழ்நாடு அரசு அனுப்பியிருந்த கடிதம் குறித்து சட்ட அமைச்சகத்திடம் கருத்து கேட்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவிக்கும் 7 பேரையும் விடுவிக்கும் தமிழ்நாடு அரசின் முடிவை நிராகரிப்பதாக தமிழ்நாடு அரசுக்கு தெரிவித்திருக்கிறோம் என்று குறிப்பிட்டார்.
இதுபற்றிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதால், விடுதலையை அனுமதிக்க மத்திய அரசுக்கு அதிகாரமில்லை என்று, தமிழ்நாடு அரசுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய முடிவு செய்திருப்பதாகவும், இது தொடர்பாக கருத்து தெரிவிக்குமாறும் இந்திய மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடந்த மார்ச் 2ஆம் நாள் கடிதம் எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.