துறைமுக நகரத் திட்டத்தில் இன்னமும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் – சீனா கூறுகிறது
கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தில், இன்னமும் தீர்வு காணப்படாத பிரச்சினைகள் இருப்பதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பீஜிங்கில் நேற்று நடந்த நாளாந்த செய்தியாளர் மாநாட்டின் போது, சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், லூ காங்கிடம், இதுதொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டன.
முன்னைய அரசினால் செய்து கொள்ளப்பட்ட கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தில், குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், தமது சீனப் பயணத்தின் போது இதுபற்றிப் பேசப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா பிரதமர் தெரிவித்துள்ளார். இதுபற்றிய சீனாவின் நிலைப்பாடு என்ன என்றும், துறைமுக நகரத் திட்டம் எப்போது மீளத் தொடங்கப்படும் என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டன.
அதற்குப் பதிலளித்த சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், லூ காங்-
“நீங்கள் குறிப்பிட்டது போன்று, கொழும்பு துறைமுகநகரத் திட்டம் தொடர்பான சுற்றாடல் மதிப்பீட்டு அறிக்கையை சிறிலங்கா அமைச்சரவை அண்மையில் அங்கீகரித்துள்ளது.இது அடிப்படையில் திட்டத்தை ஆரம்பிப்பதற்கான அனுமதியாகும்.
இரண்டு தரப்புகளும் தொடர்புகளைப் பேணி, தீர்க்கப்படாதுள்ள பிரச்சினைகள் விடயத்தில் இணக்கம் காணப்பட்டு, கூடிய விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்று நாமும் நம்புகிறோம்.
சிறிலங்கா – சீனா இடையிலான ஒத்துழைப்பு, எப்போதும் சமமான, பரஸ்பரம் நன்மைதரக் கூடியது.
சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கான தமது தேவைகளை அடிப்படையாகக் கொண்டு, எவ்வாறு ஆழமான நடைமுறை ஒத்துழைப்பை ஏற்படுத்துவது என்று சீனத் தரப்புடன் சிறிலங்கா தரரப்பு தீவிரமாக கலந்துரையாடும் என்று நாமும் நம்புகிறோம்.” என்று அவர் பதிலளித்துள்ளார்.