மேலும்

தமிழ்ப் போர்க்கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக் கோருகிறார் உருத்திரகுமாரன்

ruthrakumaranசிறிலங்காவின் சிறைகளுக்குள் வாடிக் கொண்டிருக்கும் தமிழ்ப் போர்க்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், கோரிக்கை விடுத்துள்ளளார்.

போர்கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி தபால் அட்டைப் பரப்புரையினை நேரடியாகவும் இணையவழி மூலமும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.

இதுதொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் விடுத்துள்ள அறிக்கையில்,

சிறைகளில் தற்போது வாடிக் கொண்டிருக்கும் எம்மவர்கள் அரசியற் காரணங்களால் தோற்றம் பெற்ற இனமுரண்பாட்டின் விளைவாகக் கிளர்ந்தெழுந்த போராட்டத்துடன் ஏதோவொரு வகையில் தொடர்பு பட்டார்கள் என்பதற்காகக் கைதாகியிருப்பவர்கள். இதனால் தமிழ் மக்கள் பொதுவாக இவர்களை அரசியற்கைதிகளாகக் கருதுகின்றனர். சிறிலங்கா அரசு இவர்களை பயங்கரவாதிகளாகவும் தீவிரவாதிகளாகவும் நோக்குகின்றது. நாம் தமிழ் மக்களின் தரப்பில் இருந்து அவர்களைப் போர்க்கைதிகளாகவே பார்க்கிறோம்.

சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையே நடந்த போர் வெறுமனே ஒரு உள்நாட்டுப் போர் அல்ல. இப் போர் அனைத்துலகச் சட்டங்களுக்குள் உட்பட்ட ஓர் அனைத்துலகப் பரிமாணம் கொண்ட போர். ஒரு போரில் போர் நடவடிக்கைகளின் காரணமாகவோ அல்லது போர் நடடிவக்ககைளில் ஈடுபட்டார் எனும் சந்தேகம் காரணமாகவோ ஒருவர் கைது செய்யப்படின் அவரைப் போர்க்கைதியாகவே கொள்ள வேண்டும் என்று சர்வதேசச்சட்டம் கூறுகிறது.

இதனால் விடுதலைப்புலிகள் அமைப்பின் நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டிருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் எவரும் கைது செய்யப்பட்டிருப்பின் அவர்கள் போர்க் கைதிகளாகவே கருதப்பட வேண்டியவர்களாவர்.

சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையிலான போர் முடிவுக்கு வந்தவுடன் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அந்நேரமே விடுதலை செய்யப்பட்டிருந்திருக்க வேண்டும்.

இதனை அனைத்துலக சமூகம் உறுதிப்படுத்தியிருக்கவும் வேண்டும். ஆகவே போர் முடிவுக்கு வந்த பின்னரும் போர்க்கைதிகளைச் சிறைக்குள் அடைத்து வைத்திருப்பது அனைத்துலகச் சட்டமீறலாகும்.

ஆதலால் எவ்வித காலதாமதமுமின்றிச் சிறிலங்காவின் சிறைகளுக்குள் அடைக்கப் பட்டிருக்கும் அனைத்துக் கைதிகளையும் எவ்வித நிபந்தனைகளும் இன்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் என நாம் கோருகிறோம்.

ஆனால் சிறிலங்காவில் போர்க்கைதிகளாகக் கைது செய்யப்பட்ட தமிழ்ப்போராளிகள் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். பலர் காணாமல் போயுள்ளனர். இன்னும் பலர் தொடர்ந்தும் சிறிலங்காவின் சிறைச்சாலைகளுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.

முன்னைய மகிந்த இராஜபக்ச ஆட்சிக் காலத்தில் மட்டுமல்ல, தம்மை நல்லாட்சி என்று கூறிக் கொள்ளும் தற்போதய அரசாங்கத்தினது அணுகுமுறையிலும் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. இவ் விடயம் குறித்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களுக்குத் தற்போதைய அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் பல தடவைகள் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன.

தமிழ் போர்க்கைதிகள் விடயம் தொடர்பாகப் பரந்துபட்ட மக்கள் போராட்டத்தின் மூலம் அனைத்துலக கவனத்தைப் பெறச் செய்வது மிகவும் முக்கியமானதாகும். தாயகத்தில் மட்டுமல்ல புலம் பெயர் நாடுகளிலும் இப் போராட்டம் விரிவு பட வேண்டும். அனைத்துலக ரீதியாக மேற்கொள்ளக்கூடிய சட்ட நடவடிக்கைகள் குறித்தும் நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இவ் விடயத்தில் கூடுதல் கவனத்தைக் கொடுக்க நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தீர்மானித்து முன்வந்துள்ளது என்பதையும் இவ்விடத்தில் பதிவுசெய்ய விரும்புகிறோம்.

மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தபோது தமிழ்ப் போர்க் கைதிகள் சட்ட மன்றில் விசாரிக்கப்பட வேண்டுமெனக் கூறியதை இங்கே குறியிட்டுக் காட்ட விரும்புகிறோம். பயங்கர வாதத்தைத் தடுக்கும் சட்டம் (Prevention of Terrorism Act)) எனப்படும்  PPTA சட்டத்தின் கீழ்தான் தற்போது தமிழ்ப் போர்க் கைதிகள் தடுத்து வைக்கப் பட்டுள்ளார்கள் என்பதால் அவர்களது அடிப்படை மனித உரிமைகள் உட்பட சீரான ஒழுங்குமுறைகள் எல்லாம் மீறப்பட்டுள்ளன என்றும் இச்சட்டம் அகற்றப்பட வேண்டுமெனவும் மனித உரிமைகள் ஆணையமும் ஆணையாளரும் கூறியுள்ளனர்.

அவ்வாறு  பயங்கர வாதத்தைத் தடுக்கும் சட்டம் நீக்கப்பட வேண்டுமெனக் கூறிய அதே வேளையில் இப்போர்க்கைதிகள் அதே சட்டத்தின்கீழ் விசாரிக்கப் படவேண்டுமெனவும் கூறுவது முன்னுக்குப் பின் முரணானதாக உள்ள நிலையில் மனித உரிமை ஆணையாளர் அவர்கள் இவ்விடயத்தில் தனது நிலைப்பாட்டினைத் தெளிவுபடுத்த வேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *