மேலும்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 158 பேர் தடுத்து வைப்பு – அமைச்சர் சுவாமிநாதன் தகவல்

swaminathan-sumanthiranபயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 158 பேர் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று தகவல் வெளியிட்டுள்ளார், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்.

நாடாளுமன்றத்தில் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் கொண்டு வரப்பட்ட, காணாமற்போனோர் மற்றும் அரசியல் கைதிகள் விவகாரங்கள் தொடர்பான ஒத்திவைப்பு வேளை பிரேரணைக்குப் பதிலளித்து உரையாற்றிய போதே அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், இந்த தகவலை வெளியிட்டார்.

“பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறிய குற்றங்களை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு ஒரு மாத சிறைத்தண்டனையும், ஒரு ஆண்டு புனர்வாழ்வும் அளிப்பதென முன்னர் இணக்கம் காணப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், சட்டமாஅதிபர், பிரதமர் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்திலேயே இதற்கு இணக்கம் காணப்பட்டது.

இதற்கமைய, குற்றம்பத்திரம் தாக்கல் செய்யப்படாத, 39 சந்தேக நபர்கள், கடந்த நொவம்பர் 11, 13ஆம் நாள்களில் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

அவர்களில் 19 பேருக்கு  ஒரு ஆண்டு புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், 16 கைதிகள் அதற்கு மறுப்புத் தெரிவித்து விட்டனர்.

தற்போது 11 சிறைச்சாலைகளில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 158 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 32 பேர் தண்டனை விதிக்கப்பட்டவர்கள். தண்டனை விதிக்கப்பட்ட மேலும் 9 பேர், தமது தீர்ப்புகளுக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளனர்.

103 பேருக்கு எதிராக குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஏனைய 14 பேர் மீது நீதிவான் நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ளன.

இந்த வழக்குகளை துரிதமாக விசாரிக்க சிறப்பு மேல் நீதிமன்றம் அமைக்கப்பட்டு ஒன்றரை மாதமாக செயற்பட்டு வருகிறது” என்றும் அவர்  குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *