ஆட்கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனங்களின் உதிரிப்பாகங்கள் கடற்படைத்தளத்தில் சிக்கின
திருகோணமலையில் கொலை செய்யப்பட்ட 11 இளைஞர்களை கொழும்பில் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட, இரண்டு டிபென்டர் வாகனங்களின் பாகங்கள், வெலிசறை சிறிலங்கா கடற்படைத் தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நீதிமன்ற அனுமதியுடன், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கடந்த வாரம் வெலிசறை கடற்படைத் தளத்தில் தேடுதல் நடத்தியிருந்தனர்.
இதன்போதே, திருகோணமலையில் கொலை செய்யப்பட்ட, 11 இளைஞர்களை கொழும்பில் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட, இரண்டு டிபென்டர் வாகனங்களின் பாகங்கள், மற்றும் மற்றொரு இளைஞரைக் கடத்திச் சென்று கொலை செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட உந்துருளி ஒன்றின் பாகங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
ஆட்கடத்தல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பாகம் பாகமாகப் பிரிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றின் ஆவணங்களும் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட வாகன உதிரிப்பாகங்கள் நீதிமன்ற அனுமதியுடன் அரசாங்க பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டு மேலதிக விசாரணை நடத்தப்படவுள்ளது.