இந்தியக் கடற்படை போர்க்கப்பல் உற்பத்தி பிரிவின் உயர்அதிகாரி சிறிலங்கா வருகை
இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல் உற்பத்தி மற்றும் கையேற்றல் பிரிவின் கட்டுப்பாட்டாளர் வைஸ் அட்மிரல் ஜி.எஸ்.பப்பி சிறிலங்கா கடற்படைத் தளபதியைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்தில் இந்தச் சந்திப்பு நேற்று இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தனவும், வைஸ் அட்மிரல் ஜி.எஸ்.பப்பியும், இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
இந்தப் பேச்சுக்களில், கொழும்பிலுள்ள இந்தியத் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் பிரகாஸ் கோபாலனும் பங்கேற்றார்.
இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் தளத்தில் தற்போது கட்டப்பட்டு வரும் இரண்டு ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களை சிறிலங்கா கொள்வனவு செய்யவுள்ளது.
இந்தக் கப்பல்களில் ஒன்று விரைவில் சிறிலங்கா கடற்படையிடம் கையளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையிலேயே, இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல் உற்பத்திப் பிரிவின் கட்டுப்பாட்டாளர் சிறிலங்கா வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.