சீனாவுடன் வலுவான கூட்டை எதிர்பார்க்கிறதாம் சிறிலங்கா
ஏனைய நாடுகளுடன் பொருளாதார உடன்பாடுகளைச் செய்து கொண்டிருந்தாலும், சீனாவுடன் வலுவான கூட்டை சிறிலங்கா பேண வேண்டியுள்ளதாக சிறிலங்காவின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், ஒஸ்ரியா சென்றுள்ள ரவி கருணாநாயகக்க, அங்கு வர்த்தக சமூகத்தினரிடம் பேசும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“சீனாவின் முதலீடுகள் சிறிலங்காவுக்கு அவசியம் என்பதில் பொதுக்கருத்து ஏற்பட்டுள்ளது. சீனா ஒரு ஆளுமையான பங்காளர். அந்தக் கூட்டு சிறிலங்காவுக்கு தொடர வேண்டும்.
மேலதிக ஐரோப்பிய முதலீடுகளுக்கும் சிறிலங்காவின் சந்தைகளை திறக்க வேண்டியுள்ளது. மனித உரிமைகள் விவகாரத்தில் அரசாங்கம் அளித்துள்ள வாக்குறுதிகள் மூலம் இது சாத்தியமானது.
இந்தியச் சந்தைகளைப் பயன்படுத்த எதிர்பார்க்கும் முதலீட்டாளர்கள் அதற்கு சிறிலங்காவைப் பயன்படுத்த முடியும்.
சிறிலங்காவில் முதலீட்டாளர்கள் தமது உற்பத்தி மையங்களை அமைப்பதன் மூலம், இந்தியச் சந்தைகளுக்குள் இலகுவாக நுழைய முடியும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.