சீபா உடன்பாட்டுக்கு மறுத்ததால் தான் ராஜபக்ச ஆட்சியைக் கவிழ்த்தது இந்தியா – ரம்புக்வெல
இந்தியாவுடன் விரிவான பொருளாதார கூட்டு உடன்பாடு (சீபா) செய்து கொள்ள மகிந்த ராஜபக்ச அரசாங்கம் மறுத்தமையினால் தான், இந்திய உளவுப் பிரிவான ரோ, சிறிலங்காவில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தியது என்று குற்றம்சாட்டியுள்ளார், நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல.
“நாட்டை பாதுகாக்கும் நோக்கில் 2009 ஆம் ஆண்டு இறுதிக் காலப்பகுதியில் இந்தியா வலியுறுத்திய விரிவான பொருளாதார கூட்டு உடன்பாட்டை நாங்கள் நிராகரித்தோம்.
அப்போது, இந்தியாவில் எதிர்க் கட்சி தலைவராக இருந்த சுஸ்மா சுவராஜும் அந்த உடன்பாட்டை வலியுறுத்தினார். ஆனால் நாங்கள் நிராகரித்தோம்.
எமது நாட்டின் இளைஞர்களுக்கான சந்தர்ப்பம் இந்தியர்கள் வசம் போய் விடக்கூடாது என்பதற்காக இதனைச் செய்தோம்.
ஆனால் இன்று சீபா உடன்பாட்டைவேறு ஒரு பெயரில் கைச்சாத்திட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
நாம் இதனை எதிர்த்தமையினால், ரோ மற்றும் உள்ளூர் சக்திகளின் துணையுடன் சிறிலங்காவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது இந்தியா .
மகிந்த ராஜபக்சவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் தனிப்பட்ட கோபம் எதுவும் இல்லை. நாட்டின் நலன் கருதி சில விடயங்களை நாங்கள் செய்ய வில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.