அமெரிக்க கடற்படைகளின் மத்திய கட்டளைப் பணியகத் தளபதியுடன் சிறிலங்கா தூதுவர் சந்திப்பு
அமெரிக்க கடற்படைகளின் மத்திய கட்டளைப் பணியகத்தின் தளபதி வைஸ் அட்மிரல் கெவின் டொனேகனுடன், பாஹ்ரெயினில் உள்ள சிறிலங்கா தூதுவர் கலாநிதி சாஜ் மென்டிஸ் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
அமெரிக்காவின் ஐந்தாவது கப்பற்படை மற்றும் கூட்டு மெரைன் படைகளை உள்ளடக்கிய, அமெரிக்க கடற்படைகளின், மத்திய கட்டளைப் பணியகம் பாஹ்ரெயினில் உள்ளது.
பாஹ்ரெயினில் உள்ள சிறிலங்கா தூதுவர், அமெரிக்க கடற்படைகளின் மத்திய கட்டளைப் பணியகத்தின் தளபதி வைஸ் அட்மிரல் கெவின் டொனேகனுடன், கூட்டு மெரைன் படைகளுக்கும், சிறிலங்கா கடற்படைக்கும் இடையிலான, நெருக்கமான ஒத்துழைப்பு மற்றும் கூட்டுச் செயற்பாடுகள் குறித்து பேச்சுக்களை நடத்தினார்.
இந்தச் சந்திப்பில் கூட்டு மெரைன் படைகளின் பிரதித் தளபதியும், பிரித்தானிய கடற்படையைச் சேர்ந்தவருமான கொமடோர் வில் வரண்டரும் பங்குபற்றினார்.
இந்தியப் பெருங்கடலில், மிகவும் உயர்ந்த கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் சிறிலங்கா இருப்பதாகவும், சிறிலங்காவை ஒட்டிய கடற்பாதைகளை பாதுகாக்க வேண்டியது முக்கியம் என்றும், இதற்கு, உயிர்த்துடிப்பாக கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் கூட்டுச் செயற்பாடு அவசியம் என்றும் அமெரிக்க கடற்படைகளின் மத்திய கட்டளைப் பணியகத்தின் தளபதி வைஸ் அட்மிரல் கெவின் டொனேகன் தெரிவித்தார்.