கிழக்கு கடற்பரப்பில் எண்ணெய் ஆய்வில் இறங்குகிறது பிரெஞ்சு பல்தேசிய நிறுவனம்
சிறிலங்காவின் கிழக்கு கடற்பரப்பில், எண்ணெய் வள ஆய்வில் பிரான்சை தளமாக கொண்ட Total என்ற பல்தேசிய எண்ணெய் நிறுவனம் ஒன்று ஈடுபடவுள்ளதாகவும், இதற்கான உடன்பாடு நேற்று கையெழுத்திடப்பட்டதாகவும், சிறிலங்காவின் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.
பிரான்சின் பல்தேசிய நிறுவனத்துக்கும், சிறிலங்காவின் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்திச் செயலகத்துக்கும் இடையில் நேற்று இது தொடர்பான கூட்டு ஆய்வு உடன்பாடு கையெழுத்திடப்பட்டது.
இந்தக் கூட்டு ஆய்வு உடன்பாடு குறித்த பேச்சுக்கள் 2012ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட போதும், நடைமுறைப் பிரச்சினைகளால் உடன்பாடு கையெழுத்திடப்படுவது தாமதமாகியது.
கிழக்கு கடற்பரப்பில், எண்ணெய் வளம் தொடர்பான ஆய்வுகள் மற்றும் தரவுகள் சேகரிப்பை மேற்கொள்ளும் இந்தக் கூட்டு ஆய்வுக்கு 25 மில்லியன் டொலர் முதலீடு செய்யப்படுகிறது.
50 ஆயிரம் சதுர கி.மீ பரப்பளவில் எண்ணெய் வளம், மற்றும் எரிவாயு வளம் உள்ளதா என்ற இந்த ஆய்வுகள் இரண்டு ஆண்டுகள் மேற்கொள்ளப்படும்.
இந்த ஆய்வில், வர்த்தக ரீதியாக எண்ணெய் அகழ்வு மற்றும் எரிவாயு அகழ்வு மேற்கொள்ளப்படுவதற்கு வாய்ப்புகள் இருந்தால், பிரெஞ்சு நிறுவனத்துடன், உற்பத்திப் பங்கீட்டு உடன்பாடு ஒன்றுக்கான பேச்சுக்கள் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
உலகின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றாக Total, எண்ணெய் மற்றும் எரிவாயு, உற்பத்தி மற்றும் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. இந்த நிறுவனம் உலகில் 130 நாடுகளில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.