மேலும்

பதவிக்காலம் முடிந்தது – கேள்விக்குறியாகியுள்ள பரணகம ஆணைக்குழுவின் எதிர்காலம்

maxwell_paranagama_commissionகாணாமற்போனோர் குறித்து விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட அதிபர் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நேற்றுடன் முடிந்துள்ள நிலையில் அதன் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான இந்த ஆணைக்குழு, காணாமற்போனோர் தொடர்பாக தம்மிடம் செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு, அதன் பதவிக்காலத்தை நீடிக்க வேண்டும் என்று கோரியிருந்தது.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவின் பதவிக்காலம், நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.

எனினும், இதன் பதவிக்காலத்தை நீடிக்க விடுக்கப்பட்ட கோரிக்கை குறித்து இன்னமும் சிறிலங்கா அதிபர் செயலகத்திடம் இருந்து பதில் வரவில்லை என ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேவேளை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று ஜேர்மனிக்குப் புறப்பட்டுச் சென்று விட்டார் என்பதும், நாடு திரும்புவதற்கு ஆறு நாட்களாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பரணகம ஆணைக்குழுவின் எதிர்காலம், அது தொடர்ந்து செயற்படுமா என்பது பற்றிக் கேள்விகள் எழுந்துள்ளன.

இந்த ஆணைக்குழுவைக் கலைத்து விட்டு, இதனூடாக முன்னெடுக்கப்பட்ட  விசாரணைகள், பொருத்தமான ஒரு அமைப்பிடம் கையளிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் கடந்த ஆண்டு பரிந்துரைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *