அமெரிக்கா செல்கிறார் மங்கள சமரவீர- நல்லிணக்க செயல்முறைகள் குறித்து விளக்கமளிப்பார்
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அடுத்த வாரம் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். இதன்போது, நல்லிணக்கச் செயல்முறைகளின் முன்னேற்றங்கள் குறித்து அமெரிக்க அதிகாரிகளுக்கு விளக்கமளிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைதிக்கான அமெரிக்க நிறுவகத்தின் கருத்தரங்கில் பங்கேற்பதற்காகவே சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அமெரிக்கா செல்லவுள்ளார்.
வரும் 25ஆம் நாள் நடக்கவுள்ள இந்தக் கருத்தரங்கில், முன்னேற்றகரமான நல்லிணக்கத்தை எவ்வாறு ஆரம்பிப்பது, போருக்குப் பிந்திய முன்னேற்றங்கள், வலுவான ஜனநாயக நிறுவனங்களை உருவாக்குதல் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.
இந்தக் கருத்தரங்கில், பொருளாதார அபிவிருத்திக்கான திட்டங்கள் உள்ளிட்ட சிறிலங்காவில் நிலையான அமைதியை ஏற்படுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள், குறித்து மங்கள சமரவீர விளக்கமளிப்பார். கருத்தரங்கைத் தொடர்ந்து, கேள்வி பதில் நிகழ்வும் இடம்பெறும்.
இதில் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வாலும் பங்கேற்கவுள்ளார்.