நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சிப் பட்டறை – முக்காற்பங்கு உறுப்பினர்களை காணவில்லை
துறை மேற்பார்வைக் குழுக்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவூட்டும், மூன்று நாள் பயிற்சிப் பட்டறை நேற்று நாடாளுமன்ற, குழுக்களின் அறையில் ஆரம்பமான நிலையில், இதில், 62 உறுப்பினர்கள் மாத்திரம் பங்கேற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களின் திறனை விருத்தி செய்யும் நோக்கில் இந்த மூன்று நாள் பயிற்சிப் பட்டறை ஒழுங்கு செய்யப்பட்டது.
நேற்றுக்காலை இந்தப் பயிற்சிப் பட்டறை ஆரம்பமாகியது. இதில், சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 உறுப்பினர்களில், 62 பேர் மாத்திரமே பங்கேற்றனர்.
அரசதரப்பை சேர்ந்த 44 உறுப்பினர்கள், கூட்டு எதிர்க்கட்சியில் உள்ள ஐக்கிய மக்.கள் சுதந்திர முன்னணியின் 9 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 9 நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாத்திரம் நேற்றைய அமர்வில் பங்கேற்றனர்.ஜேவிபி உறுப்பினர்கள் எவரும் இதில் பங்கேற்கவில்லை.
நேற்றைய அமர்வில் பிரித்தானிய நாடாளுமன்றத்தைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்கள் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.
இந்த பயிற்சிப் பட்டறையில் அமைச்சர்கள் மற்றும் அரச தரப்பு உறுப்பினர்கள் மிக குறைந்தளவிலேயே பங்கேற்றதாகவும், நேற்றைய அமர்வின் மதியஉணவு இடைவேளையின் போது, 52 உறுப்பினர்கள் மாத்திரமே பங்கேற்றிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறிலங்கா நாடாளுமன்ற அமர்வுகளில், உறுப்பினர்களும் அமைச்சர்களும் ஒழுங்காக பங்கேற்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.