நாளை ஜேர்மனி செல்கிறார் சிறிலங்கா அதிபர் – அங்கிருந்து ஒஸ்ரியா செல்லவும் திட்டம்
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, நாளை ஜேர்மனிக்கான மூன்று நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வரும் 23ஆம் நாளே, பெர்லினுக்குப் பயணம் மேற்கொள்ள முன்னர் திட்டமி்ட்டிருந்தார்.
ஆனால், தற்போது அவரது பயணம், திட்டமிட்டதை விட ஒரு வாரம் முன்னகர்த்தப்பட்டுள்ளது.இதன்படி அவரது மூன்று நாள் பயணம் நாளை ஆரம்பமாகிறது.
சிறிலங்கா அதிபருடன், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அமைச்சர்கள் ரவி கருணாநாயக்க, மலிக் சமரவிக்கிரம, மகிந்த சமரசிங்க, பௌசர் முஸ்தபா ஆகியோரும் ஜேர்மனி செல்லவுள்ளனர்.
இந்தப் பயணத்தின் போது ஜேர்மனி அதிபர் ஏஞ்சலா மார்க்கலுடன், மைத்திரிபால சிறிசேன இருதரப்பு பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
அத்துடன், பல்வேறு இருதரப்பு உடன்பாடுகளும் கையெழுத்திடப்படவுள்ளன.
ஜேர்மனிக்கான மூன்று நாள் பயணத்தை முடித்துக் கொண்டு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஒஸ்ரியா செல்லவும் திட்டமிட்டுள்ளார்.