பெப்ரவரிக்கு முன் சிறிலங்கா வருவார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதத்துக்குள் சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவில் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனை சிறிலங்காவுக்கு வருமாறு, மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் அழைப்பு விடுத்திருந்தது.
அவர், கடந்த செப்ரெம்பர் மாதம் நடந்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடருக்கு முன்னர் சிறிலங்கா வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், சிறிலங்கா அரசாங்கம் அழைப்பு விடுத்து பத்து மாதங்களுக்கு மேலாகியும், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கொழும்பு வரவில்லை.
இந்த நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடருக்கு முன்னதாக அவர் சிறிலங்கா வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடர், வரும் பெப்ரவரி மாதம் 29ஆம் நாள் தொடங்கி, மார்ச் 24ஆம் நாள் வரை இடம்பெறவுள்ளது.
எனவே, வரும் பெப்ரவரி மாத இறுதிக்குள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சிறிலங்கா வருவார் என்றும், இந்தப் பயணத்தின் போது அவர், வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கும் செல்வார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.